சர்வதேச மனிதக் கடத்தல் சதியில் தொடர்புடைய 31 வயது கனேடிய-அமெரிக்க இளைஞர், அமெரிக்க நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கியூபெக் மாகாண எல்லையிலுள்ள அக்வெசாஸ்னே மோஹாக் (Akwesasne Mohawk) பழங்குடியினப் பகுதியைச் சேர்ந்த ரஹ்சொன்டனோஸ்தா டெலோர்மியர் (Rahsontanohstha Delormier) என்ற நபர், நியூயார்க் வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தன் மீது சுமத்தப்பட்ட மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி அன்று நடைபெற்ற விசாரணையின் போது, நிதி ஆதாயத்திற்காக சட்டவிரோதமாக மனிதர்களைக் கடத்த சதி செய்தமை மற்றும் நான்கு கடத்தல் குற்றச்சாட்டுகள் ரஹ்சொன்டனோஸ்தா டெலோர்மியர் (Rahsontanohstha Delormier) மீது சுமத்தப்பட்டதாகவும் அவற்றை அவர் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை (DOJ) அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அவருக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கிற்கான இறுதித் தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி அன்று அறிவிக்கப்படவுள்ளது.


