ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கிங்ஸ்டன் மாநகர சபை, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதப் பணத்தைக் கொண்டு ஏழை மக்களின் பசியைப் போக்கும் மாற்றுச் சிந்தனையிலான ஒரு புதிய மனிதாபிமான திட்டத்தை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளது.
தனது நகர்ப்புற வாகன நிறுத்துமிட விதிமீறல் மூலம் கிடைக்கும் அபராத வருவாயை உள்ளூர் உணவு வங்கிகளுக்கு (Food Banks) வழங்கும் ‘உணவுக்கான அபராதம்’ (Fines for Food) திட்டத்தை கிங்ஸ்டன் மாநகர சபை, அதிகாரப்பூர்வமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விஸ்தரிப்பதாக அறிவித்துள்ளது.
இப்புதிய விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு சுமார் 80,000 டொலர்கள் அபராதப் பணம் நேரடியாக ஒரு அதிநவீன ஹைட்ரோபோனிக்ஸ் பண்ணைக்கு ஒதுக்கப்படவுள்ளது.
இதன் மூலம் வருடத்தின் 365 நாட்களும் குளிர்காலம் உட்பட அனைத்துக் காலங்களிலும் புதிய, சத்தான பசுமைக் கீரைகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு, உள்ளூர் ஏழை மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கிங்ஸ்டன் நகரின் முதன்மை உணவு வங்கியான ‘பார்ட்னர்ஸ் இன் மிஷன்’ (Partners in Mission Food Bank) அமைப்பு, கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து மட்டும் இதுவரை 1,700 கிலோகிராமுக்கும் அதிகமான புதிய நுகர்வுப் பொருட்களைப் பெற்றுப் பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


