கனடாவில் தொழிலாளர் மோதல்களை குறைப்பது தொடர்பில் மத்திய அரசு புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது.
மத்திய வேலைவாய்ப்பு அமைச்சர் Patty Hajdu, தொழிற்சங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான மோதல்கள் முக்கிய துறைகளை பாதிக்கும் போது அரசு எவ்வாறு தலையிட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையில் அரசு தலையிடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவின் தொழிலாளர் சட்ட மறுபரிசீலனை, கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள், தானியங்கி தொழில்நுட்பம், தொழிலாளர் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்களிடம் கருத்துகளை பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் கனடாவின் முக்கிய துறைமுகங்கள், ரயில்வே சேவைகள், Air Canada மற்றும் Canada Post போன்ற இடங்களில் இடம்பெற்ற வேலைநிறுத்தங்கள் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தன.
இதன்போது, தொழிலாளர் சட்டத்தின் 107ஆவது பிரிவு பயன்படுத்தப்பட்டு சில மோதல்களில் அரசு தலையிட்டிருந்தது. இந்த நடைமுறை தொழிலாளர்களின் உரிமையை பாதிக்கக்கூடும் என தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அதேசமயம், Canadian Labour Congress தலைவர் பீயா புரூஸ்கே, வேலைநிறுத்த உரிமையை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் அரசு ஏற்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தங்கள் நீண்டகாலமாக நீடித்து பொருளாதாரத்தை பாதிக்கும் சூழலில், தொழிலாளர் உரிமைகளையும் நாட்டின் பொருளாதார நலன்களையும் சமநிலைப்படுத்துவது அரசின் சவாலாக உள்ளது.


