கனடாவின் அல்பெர்டா மாகாண அரசு, நாளொன்றுக்கு 10 இலட்சம் பேரல் எண்ணெயை கனடாவின் மேற்குக் கடற்கரைக்கு கொண்டு செல்லும் புதிய எண்ணெய் குழாய் திட்டத்தை, ஜூலை முதலாம் திகதிக்குள் மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது.
இந்தத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததா என்பதை மத்திய அரசு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதிக்குள் தீர்மானிக்க உள்ளது.
அதேவேளை, இந்தக் குழாய் திட்டம் வர்த்தக ரீதியில் நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துள்ளது.
அல்பெர்டா பெட்ரோலியம் சந்தைப்படுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் மாசன், எண்ணெய் உற்பத்தியாளர்கள் இந்தத் திட்டத்திற்கு இதுவரை வெளிப்படையான ஆதரவு தெரிவிக்காத நிலையில், இது இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அல்பெர்டா மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான உடன்பாட்டின் படி, தொழிற்துறைக்கான கார்பன் விலை உயர்வு முந்தைய திட்டத்தை விட மெதுவாக அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, புதிய குழாய் திட்டத்திற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் 2027 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலேயே ஆரம்பமாகும் என அல்பெர்டா அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


