பாழடைந்து வரும் ’24 சசெக்ஸ் டிரைவ்’ பிரதமர் இல்லத்தை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில், அதற்கான பிரத்யேக வடிவமைப்புப் போட்டி மற்றும் நிதி திரட்டும் பிரசாரம் முதலானவை முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்திற்கான ஒட்டுமொத்த செலவையும் மக்களின் வரிப்பணத்திலிருந்து மட்டுமே செலவிடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, ‘ரிடோ ஹால் அறக்கட்டளை’ (Rideau Hall Foundation) என்ற நடுநிலையான தேசிய அறக்கட்டளை மூலம் நாடு முழுவதும் நிதி திரட்டப்படவுள்ளது.
34 அறைகளைக் கொண்ட இந்த வரலாற்றுப் புகழ்பெற்ற பாரம்பரியக் கட்டிடத்தை மாற்றி அமைப்பதற்கான இறுதி வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பொறுப்பு, தகுதிவாய்ந்த கனேடிய நிறுவனங்களுக்கிடையேயான போட்டியின் மூலம் முடிவு செய்யப்படவுள்ளது.
கனடாவின் புகழ்பெற்ற இந்த அதிகாரப்பூர்வ இல்லம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், அதாவது முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் (Stephen Harper) அங்கிருந்து வெளியேறிய பிறகு, வசிக்கத் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டுப் பூட்டப்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்திற்குள் ஆபத்தான அஸ்பெஸ்டாஸ் (Asbestos) துகள்கள், பூஞ்சைகள் (Mould) மற்றும் எலிகளின் தொல்லைகள் அதிகரித்தமையால், 2024 ஆம் ஆண்டிற்குள் அதன் உட்பகுதிகள் முற்றிலும் இடித்துத் துப்புரவு செய்யப்பட்டன.
இந்த இல்லம் பழுதடைந்ததால், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் ‘ரிடோ காட்டேஜ்’ (Rideau Cottage) என்ற தற்காலிக இல்லத்திலேயே வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


