கியூபெக் மாகாணத்தில், உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குவதாகக் கூறப்படும் ‘எனர்ஜி டிரிங்க்ஸ்’ (Energy Drinks) எனப்படும் ஊக்கபானங்களை 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு விற்பனை செய்வதை முற்றாகத் தடை செய்வதற்கான புதிய சட்டமூலம் மாகாண சட்டமன்றத்தில் (National Assembly) உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டில், 15 வயதுடைய கியூபெக் சிறுவன் ஒருவன் இந்த எனர்ஜி டிரிங்க்ஸை அருந்தியதால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் காரணமாக அகால மரணமடைந்திருந்தார். அதைத் தொடர்ந்து, கியூபெக் மாகாணத்தில் உருவெடுத்த பாரிய மக்கள் போராட்டத்தின் வெற்றியாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் சோனியா பெலாஞ்சே (Sonia Bélanger), இளையோரின் ஆரோக்கியத்தில் எனர்ஜி டிரிங்க்ஸ் ஏற்படுத்தும்
தீங்கான விளைவுகளைத் தடுத்தல்" என்ற தலைப்பிலான “பில் 9” சட்டமூலத்தை சட்டமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்.
இப்புதிய சட்டத்தின்படி, கியூபெக் மாகாணத்தின் புவியியல் எல்லைக்குள், 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கடைகளிலோ, இணையத்தளம் (Online) மூலமாகவோ அல்லது தானியங்கி விற்பனை இயந்திரங்கள் (Vending Machines) வழியாகவோ ‘எனர்ஜி டிரிங்க்ஸ்’ (Energy Drinks) எனப்படும் ஊக்கபானங்களை விற்பனை செய்வது முற்றாகத் தடை செய்யப்படுகிறது.
மேலும், 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள், தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்காகவோ அல்லது பிறருக்காகவோ இந்த பானங்களை வாங்குவதும் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. இச்சட்ட விதிமுறைகளை மீறி, இந்த பானங்களை வாங்கும் அல்லது கைவசம் வைத்திருக்கும் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு 100 கனேடிய டொலர் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடுமையான சட்டக் கட்டுப்பாட்டுக்கான பின்னணியில் சகாரி மிரோன் இயக்கம்' (Zachary Miron Movement) என்ற மக்கள் போராட்டக் குழு முக்கியப் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
