மட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டி ஒன்றைக் கூலிக்கு அமர்த்திச் சென்ற கொள்ளையர்கள், அதன் சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து, அவரிடமிருந்த தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கைபேசி என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மயங்கிய நிலையில் ரிதிதென்னை காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி இன்று வியாழக்கிழமை (28) காலை மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பூநொச்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இவர் மட்டக்களப்பு நகரின் ‘சின்ன ஆஸ்பத்திரி’ முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து தனது வாகனத்தைச் செலுத்தி வருகிறார்.
சம்பவதினமான நேற்று (27) பிற்பகல் 3:00 மணியளவில் வீடு சென்று மதிய உணவை உட்கொண்ட அவர், மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.
இரவு 7:00 மணியளவில் இரவு உணவிற்காக இடியாப்பம் வாங்கிக்கொண்டு வீடு திரும்புவதாகத் தனது உறவினர்களுக்குக் கைபேசி மூலமாகத் தெரியப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மட்டக்களப்பு நகரின் ஆட்டோ தரிப்பிடத்திலிருந்து நபர் ஒருவர் வாழைச்சேனை வரை செல்வதற்காக இவரது முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.
எனினும், இரவு 11:00 மணியாகியும் சாரதி வீடு திரும்பாததாலும், அவரது கைபேசி வேலை செய்யாததாலும் பதற்றமடைந்த உறவினர்கள், அவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இன்று (28) காலை, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை காட்டுப் பகுதியை அண்டிய பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று அநாதரவாக நிற்பதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.
அருகில் சென்று பார்த்தபோது, அதற்குள் சாரதி மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக வாழைச்சேனை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மயக்கமுற்றுக் கிடந்த சாரதியை மீட்டு அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
கொள்ளையர்கள் திட்டமிட்டபடி முச்சக்கரவண்டியை வாழைச்சேனை நோக்கி வாடகைக்கு அமர்த்திச் சென்றுள்ளனர்.
வழியில் வைத்துச் சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து, அவர் சுயநினைவை இழந்ததும் அவரிடமிருந்த:
ஒரு பவுன் தங்க மோதிரம், பணம், கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றைச் சூறையாடிக்கொண்டு, அவரை ஆட்டோவுடன் காட்டுப் பகுதியிலேயே கைவிட்டுவிட்டுத் தப்பி ஓடியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரும், வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்து கூட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தப்பியோடிய கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
