சர்ச்சில் ஃபோல்ஸ் (Churchill Falls) நீர்மின் உற்பத்தித் திட்டம் தொடர்பாக இருதரப்புக்கும் பயனளிக்கும் ஒரு புதிய உடன்படிக்கையை எட்ட முடியும் என கியூபெக் (Quebec) மற்றும் நியூஃபவுண்ட்லாந்து ஆகிய பிராந்தியங்களின் அரச தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
லிபரல் கட்சியினரின் ஆட்சிக் காலத்தில் 2024 ஆம் ஆண்டு எட்டப்பட்ட ஆரம்பகட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது, நியூஃபவுண்ட்லாந்து மக்களின் பொது நலன்களுக்கு உகந்ததாக இல்லை என்று அந்தப் பிராந்தியத்தின் தற்போதைய முற்போக்கு கன்சர்வேடிவ் அரசால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர் குழு தனது தற்போதைய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ அறிக்கையில், தற்போதைய உடன்படிக்கையானது நியூஃபவுண்ட்லாந்தின் உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை முடக்குவதாகவும், பிற சந்தைகளுக்கு மின்சாரத்தை விநியோகிப்பதற்கான கட்டமைப்புகளைக் கட்டுப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்தில் ‘ஹைட்ரோ-கியூபெக்’ (Hydro-Québec) நிறுவனம் ஒரே நேரத்தில் சிறுபான்மை பங்குதாரராகவும், முதன்மை வாடிக்கையாளராகவும் இருப்பது முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த அறிக்கை வெளியான போதிலும், கியூபெக் மாகாணத்தின் புதிய முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette), நியூஃபவுண்ட்லாந்து முதல்வர் டோனி வேகம் (Tony Wakeham) ஆகிய இருவருக்குமிடையே சுமுகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில், அந்த அறிக்கையை விரிவாக ஆய்வு செய்து, இரு மாகாணங்களுக்கும் சாதகமான (Win-Win) புதிய ஒப்பந்தத்தை நோக்கி நகர இரு பிராந்தியத் தலைவர்களும் உடன்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
