மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள சர்ச்சைக்குரிய ‘சட்டமூலம் C-22’ (Bill C-22) எனப்படும் புதிய தரவு அணுகல் மற்றும் கண்காணிப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படுமானால், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச உளவுத்துறை கூட்டணிகளுக்குப் பேரபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய உளவு அமைப்பான ‘சிசிஸ்’ (CSIS) மற்றும் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளே இந்த கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் டிஜிட்டல் தரவுகளைப் பொலிஸாரும் உளவுத்துறையினரும் எளிதாகப் பெறுவதற்கு வழிவகுக்கும் இந்தச் சட்டத்திற்கு எதிராக, சர்வதேசத் தொழில்நுட்ப நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள் எனப் பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்த தீவிர எதிர்ப்பலைகளுக்கு மத்தியில், தங்களின் புதிய சட்டத்தைப் பாதுகாப்பதற்காகக் கனேடிய உளவுத்துறை மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தற்போது தீவிர கூட்டு ஊடகப் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைத்தொலைபேசிகளின் அண்மைக்கால அசுர வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் தங்களின் புலனாய்வு நடவடிக்கைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை விளக்குவதற்காக, கனேடிய உளவு அமைப்பு சில ரகசிய உளவு விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது.
கனேடிய உளவு அமைப்பின் கொள்கை மற்றும் மூலோபாயக் கூட்டாண்மைக்கான துணை இயக்குநர் நிக்கோல் ஜைல்ஸ் (Nicole Giles) இந்த விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, அப்பிள் மற்றும் மெட்டா (Meta) நிறுவனங்கள் இச்சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளன.
இந்த சட்டமானது, கனேடிய வாடிக்கையாளர்களின் Encryption குறியாக்க பாதுகாப்பு அம்சங்களை முற்றாக அழித்துவிடும் என்றும் அப்பிள் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
