கனடாவின் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், 44 புதிய திட்டங்களுக்கு 66 மில்லியன் டொலர் நிதியுதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
வான்கூவரில் நடைபெற்ற வெப் சமிட் (Web Summit) மாநாட்டில் உரையாற்றிய செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சர் எவன் சாலமன் (Evan Solomon), இம்மாபெரும் நிதியுதவித் திட்டத்தை வெளியிட்டார். மத்திய அரசின் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான ஏஐ கம்ப்யூட் அக்சஸ் ஃபண்ட் (AI Compute Access Fund) மூலம் முதற்கட்டமாக இந்த நிதியுதவி பெறுவதற்கு 44 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்குவதற்கு கம்ப்யூட்டிங் பவர் (Computing Power) எனப்படும் அதிநவீன கணினித் திறன் அவசியமாக உள்ள நிலையில், இதன் கட்டணம் மிக அதிகமாக இருப்பதால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றன. இந்தச் செலவுகளை ஈடுகட்டவும், கனேடிய நிறுவனங்கள் உலகளாவிய
ரீதியில் செயற்கை நுண்ணறிவுத்துறையில் போட்டியிடவும் இந்த நிதியுதவி உதவும் என்று கூறப்படுகின்றது. இந்த நிதியுதவியானது கனடாவை உலக செயற்கை நுண்ணறிவு
வரைபடத்தில் ஒரு முக்கிய சக்தியாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
