நிதி மோசடி மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்யும் வகையில் நிதியமைச்சுடன் இணைந்து பாதுகாப்பு செயன்முறைகளைப் பலப்படுத்தியிருப்பதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இத்தகவலைத் தெரிவித்தார். இதுபற்றி தொடர்ந்து கருத்துரைத்த அவர், நிதியமைச்சும் மத்திய வங்கியும் இணைந்து தற்போது நடைமுறையிலுள்ள செயன்முறைகளை மீளாய்வு செய்துவருவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதவாறு பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்குத் தமது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோன்று இலங்கை அரசாங்கத்தின் வங்கி என்ற ரீதியில் கணக்கு உரிமையாளர்களின் கொடுப்பனவு தொடர்பான அறிவுறுத்தல்களை சரிபார்த்தல் மற்றும் மாற்றுதல் என்பவற்றுக்கான நேரடிப் பொறுப்பு மத்திய வங்கிக்கு உரியதல்ல என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, சுட்டிக்காட்டினார்.
கணக்கு விவரங்கள் மற்றும் கொடுப்பனவு முறைகள் உரியவாறு சரிபார்க்கப்பட்டதும், அந்தக் கொடுக்கல் வாங்கலை முன்னெடுப்பதே, மத்திய வங்கியின் வரையறுக்கப்பட்ட பணியாகும் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
