நேட்டோ (NATO) நாடுகள் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை வங்கி" (DSRB)-இன் தலைமையகத்தை அமைப்பதற்கு ’டொரண்டோ நகரமே தகுதியான இடம்’ என்று, ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
இந்த சர்வதேச வங்கியின் தலைமையகத்தை கனடாவில் அமைப்பது என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதை எந்த நகரில் அமைப்பது என்பதில் டொரண்டோ, மொன்றியல், ஒட்டாவா மற்றும் வான்கூவர் ஆகிய நகரங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தத் தலைமையகம் அமைக்கப்பட்டும் மாகாணத்தில், நேரடியாக சுமார்
3,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலை காணக்கடுகின்றது.
இது மாகாணப் பொருளாதாரத்திற்குப் பெரும் பலம் சேர்க்கும் என்பதால், ஒன்ராறியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா முதலான மாகாண அரசுகள் இந்த விடயத்தில், தீவிர கவனம் செலுத்திவருகின்றன. செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட், ”டொரண்டோ நகரமே இந்த வங்கிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரே நகரம்” என்று தெரிவித்தார்.
கனடாவின் ஐந்து மிகப்பெரிய வங்கிகள், பங்குச் சந்தை மற்றும் உலகத்தரம் வாய்ந்த நிதி நிறுவனங்கள் டொரண்டோவில் இருப்பதை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை வங்கி"யை அமைப்பதற்காக டொரண்டோ நகரின் மையப்பகுதியில், ஒரு தற்காலிக அலுவலகக் கட்டடம் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, இந்த விவகாரத்தில் மொன்றியல் நகரையும் டொரண்டோவையும் ஒப்பிட்டுப் பல அரசியல் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
கியூபெக் மாகாணத்தில் பிரிவினைவாதம் குறித்த அச்சத்தைக் காட்டி டொரண்டோ அதிகாரிகள் இந்த வாய்ப்பைத் தட்டிப்பறிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், இந்தக் குற்றாச்சாட்டுகளை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் மறுத்துள்ளார்.
தாம் யாரையும் தாக்கிப் பேச விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், மொன்றியல் மீது தமக்குக்கு அன்பு உண்டு எனினும், இந்த வங்கி அமையும் வாய்ப்பினை வென்றெடுப்பதற்கான தகுதிகள் டொரண்டோவிடமே அதிகம் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை” வங்கியின் தலைமையகம் எங்கு அமையும் என்ற இறுதி முடிவை, பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான மத்திய அரசு விரைவில் அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
