கனடாவிலிருந்து அல்பெர்ட்டா (Alberta) மாகாணம் பிரிந்து செல்வதை ஆதரிக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக, மத்திய அரசு சார்பு சக்திகள் உடனடியாகக் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் அல்பெர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னி (Jason Kenney) அறைகூவல் விடுத்துள்ளார்.
கால்கரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒன்றிணைந்த கனடா (United Canada) என்ற விவாத மேடையில் உரையாற்றிய ஜேசன் கென்னி, இன்னும் 150 நாட்களில் கனடாவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் சமூகக் கட்டமைப்பில் ஒரு மிகப்பெரிய பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்தார்.
பிரிவினைவாதிகள் கடந்த ஒரு வருடமாகப் பொது விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், அதை முறியடிக்க கூட்டாட்சி ஆதரவாளர்கள் (Federalists) விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒட்டாவாவில் இயங்கும் மத்திய அரசு தங்களை அவமதிப்பதாகக் கருதும் அல்பெர்ட்டா மக்கள், பிரிவினைவாதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்த ஜேசன் கென்னி, ஆனால், கியூபெக் மாகாணத்தைப் போல மிரட்டும் இத்தகைய தந்திரங்கள் ஆபத்தானவை என அவர் எச்சரித்தார்.
அல்பெர்ட்டா பிரிவினை குறித்த பொதுவாக்கெடுப்பு (Referendum) தொடர்பான விவகாரங்கள் தற்போது நீதிமன்றத்தில் இருந்தாலும், இன்னும் ஐந்து மாதங்களில் இது நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், நாடு சிதறுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கனடாவின் ஒற்றுமைக்காகப் போராட வேண்டிய தருணம் இது என்று ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.


