கடமையிலிருந்த போது கொல்லப்பட்ட மொன்றியல் பெண் பொலிஸ் அதிகாரி ஓடில் மிலான்டேவின் (Odile Milante) 30-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மொன்றியல் பொலிஸார் (SPVM) நேற்று உருக்கமான அஞ்சலி நிகழ்வை நடத்தினர்.
சென்னிவில் பகுதியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மொன்றியல் பொலிஸ் மா அதிபர் பாடி தாகர் (Fady Dagher), உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஓடில் மிலான்டேவின் குடும்பத்தினர் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
1996-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் திகதி, மொன்றியலின் சென்னிவில் (Senneville) பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஓடில் மிலான்டே, தனது பொலிஸ் வாகனத்திற்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இறக்கும்போது அவருக்கு 26 வயதாகியிருந்தது.
இந்தச் சம்பவம் நடந்து நேற்றுடன் சரியாக 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன என மொன்றியல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், இன்றுவரை அவரைக் கொன்றது யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
“காலம் கடந்துவிட்டாலும், தமது சக வீரரின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை தாம் ஓயமாட்டோம்” என, மொன்றியல் பொலிஸ் மா அதிபர் இந்த அஞ்சலி நிகழ்வில் ஆற்றிய உரையின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
