நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தீவிரவாதக் கொள்கை ஈர்ப்புகளும், அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைக் குழுக்களின் உருவாக்கமும் நேரடியாக சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் மிக வெளிப்படையாகவே நடைபெறுவதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
சாதாரண மனிதர்களைப் போல உலாவும் நபர்கள், இராணுவப் பயிற்சிப் பின்னணியுடன் ஆயுதங்களைச் சேகரித்து, நாட்டின் அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்களை உருவாக்கி வருவது அண்மைக்காலப் புலனாய்வுகளில் வெளிப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பாக கியூபெக் நகருக்கு அருகே, கனேடிய ஆயுதப் படையில் (Canadian Armed Forces) பணியாற்றும் தற்போதைய வீரர்கள் உட்பட நால்வர் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அரசியல் நோக்கர்கள் இதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.
அந்த நான்கு நபர்களிடமிருந்து, 83 துப்பாக்கிகள், 16 வெடி பொருட்கள், 11,000 தோட்டாக்கள், 130 மெகசின்கள் மற்றும் இராணுவ இரவு நேரப் பார்வைக் கண்ணாடிகள் (Night vision goggles) ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
இவர்கள் பூர்வீக நிலங்களை வலுக்கட்டாயமாக ஆயுத முனையில் ஆக்கிரமிக்கத் திட்டமிட்டதுடன், அதற்காக சுடுதல், பதுங்கியிருந்து தாக்குதல் (Ambush), உயிர்வாழ்தல் மற்றும் வழிசெலுத்தல் போன்ற தீவிரப் பயிற்சிப் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இக்குழுவின் உறுப்பினர்கள் தங்களின் தரப்புக்கு புதிய ஆட்களைச் சேர்ப்பதற்கான முதன்மைத் தளமாக, இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற பொதுவான சமூக வலைத்தளப் பக்கங்களையே பயன்படுத்தியுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.
இத்தகைய தீவிரவாதக் குழுக்கள் சமூகத்தில் ஆட்களைச் சேர்க்க யூத எதிர்ப்பு (Antisemitism) மற்றும் இஸ்லாமிய வெறுப்பு (Anti-Muslim narratives) போன்ற மத ரீதியான வெறுப்புப் பிரசாரங்களை ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன என, கனேடிய உளவு அமைப்பு (CSIS) வெளியிட்ட மற்றுமொரு ரகசிய அறிக்கை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
