அமெரிக்காவிற்கான கனடா தூதுவர் மார்க் வைஸ்மேன், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும் அழைப்பிதழ் அனுப்பியதற்காக உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
வொஷிங்டனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒரு வரவேற்பு நிகழ்விற்காக, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தூதுவர் அலுவலகம் சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.
கனடாவின் உத்தியோகபூர்வ மொழிகளான ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டிலும் இருக்க வேண்டிய இந்த அழைப்பிதழ், ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து இன்று நாடாளுமன்றக் குழு முன்னிலையில் விளக்கமளித்த அமெரிக்காவிற்கான தூதுவர் மார்க் வைஸ்மேன், இது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத தவறு என்று கூறித் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.
முன்னதாக, பிரதமர் மார்க் கார்னி இந்த விவகாரம் குறித்துத் தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இருமொழி கொள்கையைக் கடைபிடிக்கும் ஒரு நாட்டின் பிரதிநிதி
இத்தகைய தவறை இழைத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவிற்கான தூதுவராகப் பதவியேற்ற மார்க் வைஸ்மேனுக்குப் பிரெஞ்சு மொழி பேசத் தெரியாது என்பது ஏற்கனவே விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. இன்றைய அமர்வின் போது, கியூபெக் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிளாக் கியூபெக்வா(Bloc Québécois) கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் அவரிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினர்.
குறிப்பாக, பால் பண்ணைத் துறை தொடர்பான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கனடாவின் நலன்களை அவரால் பாதுகாக்க முடியுமா என்பது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த வைஸ்மேன், தனது தனிப்பட்ட கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், கனடா அரசாங்கத்தின் கொள்கைகளையே தான் வொஷிங்டனில் முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் கனடா தனது உரிமைகளை விட்டுக் கொடுக்காது என்றும் அவர் உறுதியளித்தார். தற்போது தவறு திருத்தப்பட்டு, இரு மொழிகளிலும் புதிய அழைப்பிதழ்கள் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தூதுவர் அலுவலகம் அறிவித்துள்ளது.
