ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) முடிவுக்கு, ஆளும் லிபரல் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள இந்தப் பிளவைத் தவிர்க்க, வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டவுள்ளார்.
ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தொடங்கியபோது, பிரதமர் கார்னி அதனை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார்.
இதுவே, ஆளும் லிபரல் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தற்போதைய சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது
லிபரல் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலானோர், இந்தப் போர் சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது என்றும், 2003-ம் ஆண்டு நடந்த ஈராக் போரைப் போன்ற ஒரு தவறை கனடா செய்யக்கூடாது என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தமது சொந்தக் கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கார்னி தனது நிலைப்பாட்டைச் சற்றே மாற்றிக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவிற்குத் தாம் வழங்கும் ஆதரவு என்பது ஒரு “வெற்று காசோலை” (Not a blank cheque) அல்ல என்றும், அனைத்து நாடுகளும் சர்வதேசச் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.
