ஒட்டாவா நகர சபையின் 2026-ஆம் ஆண்டுக்கான பணியாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் தீர்மானம், கவுன்சிலர் டேவிட் பிரவுனின் முன்மொழிவுக்குப் பிறகு, 14-க்கு 10 என்ற வாக்குகள் வித்தியாசத்தில், இறுக்கமான நிலையில் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானம், சில நகர சேவைகளின் விநியோகத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்ற கவலைகளுக்கு மத்தியிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கவுன்சிலர் டேவிட் பிரவுன், இத்தீர்மானம் ஒரு “மிதமான” மற்றும் “நியாயமான” நடவடிக்கை என்று வர்ணித்தார்.
மத்திய அரசு ஆயிரக்கணக்கான பணியாளர்களை குறைத்து வரும் நிலையில், ஒட்டாவாவில் கடந்த ஐந்து மாதங்களில் 20,000 வேலைகள் இழக்கப்பட்டுள்ளதால், வரி செலுத்துவோரின் செலவைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானம், நகரத்தின் “பின்புற அலுவலக (back-office) செயல்பாடுகளை” கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் என பிரவுன் தெரிவித்தார்.
எனினும், தீயணைப்பு வீரர்கள், துணை மருத்துவ பணியாளர்கள், காவல்துறை, மற்றும் நகர விதிகளுக்குப் பொறுப்பான பணியாளர்கள் (bylaw services) ஆகியோரின் பணியிடங்களுக்கு இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
