மொன்றியலின் மிக முக்கியமான போக்குவரத்து சந்திப்பான நெடுஞ்சாலை 13 மற்றும் நெடுஞ்சாலை 520 இணையும் பகுதியில், இந்த வார இறுதியில் பாரிய புனரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதன் காரணமாக இன்று இரவு 9:30 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை நெடுஞ்சாலை 520 இன் ஒரு பகுதி முழுமையாக மூடப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
நெடுஞ்சாலை 13க்கு மேலாகச் செல்லும் 520 மேம்பாலத்தை (Overpass) சீரமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலை 520 கிழக்கு (Eastbound) திசையில் பயணிக்கும் பாதை, 13-வது நெடுஞ்சாலை சந்திப்புப் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை 5:00 மணி வரை முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
இப்பகுதியைக் கடக்க விரும்பும் வாகனங்கள், கோட்-டி-லீஸ் (Côte-de-Liesse) சேவை வீதியைப் (Service Road) பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மொன்றியலின் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்பவர்களை வழக்கத்தை விட 45 நிமிடங்கள் முன்னதாகவே புறப்படுமாறு போக்குவரத்து அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
