உளவுத்துறையினர் (CSIS) மற்றும் பொலிஸார் (RCMP) குற்றவாளிகளைக் கண்காணிப்பதற்கும், அவர்களது டிஜிட்டல் விபரங்களைப் பெறுவதற்கும் துணைபுரியும் வகையில் Bill C-22 எனும் புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
நவீன காலக் குற்றங்களைத் தடுக்க இந்தச் சட்டம் அவசியம் என மத்திய அரசு கூறினாலும், இது மக்களின் தனிப்பட்ட தரவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பொலிஸார் ஒரு விசாரணைக்காகத் தொலைபேசி நிறுவனங்களிடம் விபரங்களைக் கோரும்போது, ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமான முறையில் தகவல்களை வழங்குகின்றன.
இதனைச் சீர்செய்வதே இச்சட்டத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பொலிஸார் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் (Standardized format) தரவுகளை வைத்திருக்க வேண்டும் என, இந்த சட்டம் வலியுறுத்துகின்றது.
முக்கிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் ‘மெடா-டேட்டா’ (Metadata) விபரங்களை ஒரு வருடம் வரை கட்டாயம் சேமித்து வைத்திருக்க வேண்டும் எனவும் அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
