மொன்றியல் நகரில் வீடற்றோர் எதிர்கொள்ளும் கடும் நெருக்கடியைச் சமாளிக்கவும், வீதிகளில் கூடாரங்கள் அமைப்பதைத் தவிர்க்கவும் மத்திய அரசு 13 மில்லியன் டொலர்களை அவசர நிதியாக அறிவித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 125 மில்லியன் டொலர் மதிப்பிலான ‘வீடற்றோர் பாதுகாப்புத் திட்டத்தின்’ (UHEI) ஒரு பகுதியாக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
இந்த நிதி அறிவிப்பு மிகவும் நெருக்கடியான ஒரு சூழலில் வெளிவந்துள்ளது.
மொன்றியலில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வீதிகளில் வசித்து வந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக மாகாண மரண பரிசோதகர் அலுவலகம் (Coroner’s Office) தற்போது விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த சில பாதுகாப்புத் திட்டங்கள் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், இந்த ‘கடைசி நேர’ நிதி உதவியானது, பல தொண்டு நிறுவனங்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
மத்திய வீடமைப்புத் துறை அமைச்சர் கிரிகோர் ரொபர்ட்சன் மற்றும் மொன்றியல் மேயர் சோரயா மார்டினெஸ் பெர்ராடா ஆகியோர் இந்த நிதியுதவியை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
