மொன்றியலில் உள்ள உயர்நிலைப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு இடையிலான வன்முறைகள் கடந்த ஆறு ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளதாக மொன்றியல் பொதுச் சுகாதாரத் துறை (Montreal Public Health) எச்சரித்துள்ளது.
குறிப்பாக, இந்த வன்முறைப் போக்கினால் மாணவிகளே அதிகளவில் மன ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாவதாகப் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2016-17 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 36 சதவீதமாக இருந்த வன்முறைச் சம்பவங்கள், தற்போது 41 சதவீதமாக உயர்ந்துள்ளன.
வன்முறையினால் பாதிக்கப்படும் மாணவர்களில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பாதிப்பினால் ஏற்படும் மன அழுத்தத்தின் அளவு மாணவிகளிடையே மிக அதிகமாக உள்ளது.
வன்முறைக்குள்ளாகும் பெரும்பாலான மாணவிகள் கடும் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உடல் ரீதியான தாக்குதல்கள் மட்டுமன்றி, வதந்திகளைப் பரப்புதல் மற்றும் சமூக ரீதியாகப் புறக்கணித்தல் போன்ற மறைமுக வன்முறைகளையும் அவர்கள் எதிர்கொள்கின்றமை ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
