டொமினிகன் குடியரசிற்குச் சுற்றுலா சென்றிருந்த 19 வயது கனேடிய இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களை அந்த நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கியூபெக்கின் செயின்ட்-ஜூலியன் (Sainte-Julienne) பகுதியைச் சேர்ந்த டிரிஸ்டன் பிரைமோ-பொயிட்ராஸ் (Tristan Primeau-Poitras) என்பவரே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர் ஆவார்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில், டிரிஸ்டன் மற்றும் அவரது 26 வயது சகோதரர் தங்கியிருந்த விடுதியிலிருந்து உணவு வாங்குவதற்காக ஸ்கூட்டர் ஒன்றில் வெளியே சென்றுள்ளனர்.
மீண்டும் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களை வழிமறித்துக் கொள்ளையிட முயன்றுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட மோதலின் போது, கொள்ளையர்களில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டிரிஸ்டனின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக 23 மற்றும் 30 வயதுடைய இரண்டு உள்ளூர் இளைஞர்களை, அந்த நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
