மொன்றியலில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தந்தை மற்றும் அவரது ஐந்து வயது மகனை நாடு கடத்தும் முடிவை, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்படவிருந்த நிலையில், அமைச்சரின் இந்த உத்தரவு அந்தப் பிள்ளையையும் அவனது தந்தையையும் தாயிடமிருந்து பிரிப்பதைத் தடுத்துள்ளது.
ரவி சவுகான் (Ravi Chauhan) மற்றும் அவரது மகன் ஆகியோரை நாடு கடத்தும் உத்தரவு தற்போது ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரவி சவுகான் மற்றும் அவரது மனைவி, குழந்தையுடன் 2023-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளியேறி கனடாவிற்கு வந்தனர்.
இதில் ரவியின் மனைவிக்கு மட்டும் ‘அகதி அந்தஸ்து’ (Protected Person) வழங்கப்பட்டது.
ஆனால், ரவி மற்றும் அவரது மகனை நாடு கடத்த வேண்டுமென, கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த நிலையிலேயே, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) தலையிட்டு, அந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அவர்களின் வழக்கறிஞர் ஸ்டீவர்ட் இஸ்ட்வான்ஃபி, “இந்தக் குடும்பத்தைச் சிதைக்காமல் இருக்க அமைச்சர் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
இந்த ஒரு மாத கால அவகாசம், அவர்களின் வழக்கில் உள்ள தவறுகளைச் சரிசெய்யவும், அவர்கள் கனடாவிலேயே தங்குவதற்கான சட்ட வழிகளை ஆராயவும் உதவும் எனவும் வழக்கறிஞர் ஸ்டீவர்ட் இஸ்ட்வான்ஃபி தெரிவித்தார்.
