கியூபெக் மாகாணத்தின் புகழ்பெற்ற குடிவரவுத் திட்டமான ”Quebec Experience Program” ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, மாகாணம் தழுவிய அளவில் மாபெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மொன்ட்ரியல், கியூபெக் நகர் மற்றும் கேட்டினோ உட்பட ஏழு முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, கியூபெக்கில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்கள் முதலானோர், நிரந்தரக் குடியுரிமை (Permanent Residency) பெறுவதற்கு இந்த திட்டம் மிக எளிதான வழியாக இருந்தது.
ஆனால், கடந்த நவம்பர் மாதத்தில் பிரான்சுவா லெகால்ட் தலைமையிலான கியூபெக் அரசு இத்திட்டத்தை அதிரடியாக ரத்து செய்தது.
ஏற்கனவே கியூபெக்கில் இருக்கும் மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் பழைய விதிகளின் படியே குடியுரிமை வழங்க வேண்டும் (Grandfather Clause) என்பது போராட்டத்தில் ஈடுபட்டோரின் முக்கிய கோரிக்கையாகும்.
கியூபெக்கின் பல சிறு நகரங்களின் பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சிக்குக் குடிபெயர்ந்தவர்களே முதுகெலும்பாக உள்ளனர்.
இத்திட்டம் ரத்து செய்யப்படுவதால் அந்தப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என, கியூபெக் மாகாண நகரங்களின் மேயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
