பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான இரண்டு நாள் அமைச்சரவைக்
கூட்டம் கியூபெக் நகரில் நிறைவடைந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான ராஜதந்திர மோதல்
உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும்
பொருளாதாரத் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அமெரிக்காவின் தயவில் கனடா வாழவில்லை, நாங்கள் கனடியர்களாக இருப்பதாலேயே செழிக்கிறோம் என்ற தனது முந்தைய கருத்தை அமைச்சர்களிடையே பிரதமர் கார்னி மீண்டும் வலியுறுத்தினார்.
வர்த்தகம் மற்றும் பாதுகாப்பில் அமெரிக்காவை மட்டும் சார்ந்திராமல், மற்ற நாடுகளுடன் உறவை மேம்படுத்தவும், கனடாவின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் அவர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவு, பொருளாதார நெருக்கடி, சர்வதேச வர்த்தகம்
முதலான மூன்று முக்கிய விஷயங்கள், அமைச்சரவைக் கூட்டத்தின் இறுதி நாளில் விவாதிக்கப்பட்டன.
கனடாவின் கோஹியர் (Cohere) நிறுவனத்தின் நிபுணர்களுடன்
இணைந்து, அரசு நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது மற்றும்
வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் விரிவான திட்டங்களை முன்வைத்தார்.
அமெரிக்கா புதிய வரிகளை (Tariffs) விதித்தால், அதை எதிர்கொள்ளும் வகையில் மாற்று வர்த்தக வழிகளைக் கண்டறிய நிபுணர்கள் குழுவுடன் அமைச்சரவை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான நிபுணர் ஜானிஸ்
ஸ்டெய்ன் மற்றும் இந்தியாவிற்கான முன்னாள் தூதர் நாதிர் படேல்
உள்ளிட்டோர் கலந்துகொண்டு, உலக நாடுகளுடனான உறவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.
