காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் “பல சிவப்புக் கோடுகளைக் கடந்துவிட்டன” என்று கூறி, காசாவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மொன்றியலில் ஒன்றுகூடினர்.
கய்-கான்கார்டியா மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ள மத்திய நகரப் பகுதியில் திரண்ட போராட்டக்காரர்கள், புதிதாகத் திறக்கப்பட்ட Place des Montréalaises நோக்கி பேரணியாகச் சென்றனர்.
ஒரு நிரந்தர யுத்த நிறுத்தம் வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
கனடா அரசு வெறும் வார்த்தைகளோடு நிற்காமல் செயலில் இறங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.
காசாவின் மனிதாபிமான நிலைமை குறித்து பெரும்பாலானோர் தங்களின் கையறுநிலையையும், சீற்றத்தையும் வெளிப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கனடா பிராங்கோபோன், கனடா எல்லைகளற்ற மருத்துவர்கள் (Doctors Without Borders Canada), சேவ் த சில்ட்ரன் கனடா (Save the Children Canada), மற்றும் ஆக்ஸ்பாம்-கியூபெக் உள்ளிட்ட பல முக்கிய அமைப்புகளால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது.
உடனடி மற்றும் நிரந்தர யுத்த நிறுத்தம், அத்துடன் மேற்குக் கரையில் இருந்து மக்கள் இடம்பெயர்வதை நிறுத்த கனடா பணியாற்ற வேண்டும் என்பன அவர்களின் கோரிக்கைகளாகும்.
