அணுசக்திப் பாதுகாப்பை முன்னெடுக்கும் உயர்மட்ட அமைப்பான கனடிய அணுசக்தி பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டுச் செயலாற்றுமளவுக்கு, தம்மிடம் நிதி இல்லை என்று, பெஸ்ட் தெராட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ஒட்டாவா நகரத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் துறையில் இந்த நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.
ஒரு அணுசக்தி உரிமத்தின் கீழ் இயங்கும், நிறுவனமொன்று அதன் செயல்பாடுகளை நிறுத்த நேரிட்டால், வளாகத்தை சுத்தம் செய்து அப்புறப்படுத்துவதற்கான செலவுகளை ஈடுகட்டுவதற்கான, நிதி உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.
காலாவதியான $1.8 மில்லியன் நிதி உத்தரவாதத்தை மீண்டும் வழங்குமாறு, பெஸ்ட் தெராட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு கனடிய அணுசக்தி பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டிய அந்த நிறுவனம், அந்த உத்தரவாதத்தை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
தம்மை கனடிய அணுசக்தி பாதுகாப்பு ஆணையம் வற்புறுத்தினால், அணுசக்தி சார்ந்த தமது உற்பத்தியை இந்தியாவுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ மாற்றிவிடுவோம் என்றும், அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
