டித்வா புயல் நினைத்துப்பார்க்கமுடியாத இழப்பை ஏற்படுத்தி, இலங்கையில் பல குடும்பங்களுக்கும், சமூகங்களுக்கும் பேரழிவையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. கனடா, பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இருந்து, மனிதாபிமான உதவியைத் தொடர்ந்து வழங்கி, சமூகங்களின் மீட்சிக்கும், அவை மீளக்கட்டியெழுப்பப்படுவதற்கும் உதவியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அவசர உதவி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இரண்டு மில்லியன் டொலரிலும் அதிகமான மனிதாபிமான நிதி உதவியை வழங்குவதாக ராஜாங்க செயலாளர் (சர்வதேச அபிவிருத்தி) கௌரவ ரண்டீப் சறாய் (Randeep Sarai) இன்று அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உடனடியாக உணவைப் பெறுவதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு 4 மில்லியன் டொலர் வழங்கப்படுகிறது. மனிதாபிமான கூட்டிணைவின் ஓர் உறுப்பு அமைப்பான World Vision Canada விற்கு, கனடா மனிதாபிமான உதவி நிதியத்தின் ஊடாக, உதவிப் பொருட்கள், அவசர தங்குமிடம் ஆகியவற்றையும், நீர், தூய்மைப்படுத்தல் மற்றும் சுகாதாரம் ஆகிய சேவைகளை வழங்குவதற்காகவும் 350,000 டொலர் வழங்கப்படுகிறது.
மேலும் கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்தால் முகாமைப்படுத்தப்படும் பேரிடர் உதவி அவசர நிதியத்தின் ஊடாக, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தற்போதைய உதவி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக 215,000 டொலர் வழங்கப்படுகிறது. அவசர உதவியை வழங்குவதற்காக, உள்ளுர் முன்முயற்சிகளுக்கான கனேடிய நிதியத்தின் ஊடாக ஏறத்தாழ 70,000 டொலர் வழங்கப்படுகிறது. கனடா நிலைமையைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், மாறும் தேவைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக அனுபவமுள்ள பங்காளிகளுடன் நெருக்கமான தொடர்பைப் பேணுகிறது எனவும் சர்வதேச அபிவிருத்திக்கான ராஜாங்க செயலாளர் கௌரவ ரண்டீப் சறாய் (Randeep Sarai) தெரிவித்துள்ளார்.
