ஒட்டாவா நகரசபை ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணியாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி, அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என ஒட்டாவா நகரசபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது, சமீபத்தில் ஒன்ராறியோ மாகாண அரசு எடுத்த முடிவினை ஒத்ததாக உள்ளது.
ஒட்டாவா நகரசபை முகாமையாளர் வெண்டி ஸ்டெஃபன்சன், ஒட்டாவா நகர மேயர் மார்க் சட்க்லிஃப் மற்றும் கவுன்சிலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமுலில் இருந்த வீட்டிலிருந்து பணியாற்றும் முறையானது இந்த உத்தரவின் மூலம் முடிவுக்கு வருகின்றது.
தற்போது, ஒட்டாவா நகரசபையில் 85% நகர ஊழியர்கள் ஏற்கனவே அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
