மறுசுழற்சி நிறுவனமான ரைகோவாவுக்கு (Ricova) $1 மில்லியனை மொன்றியால் நகரசபை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை, கியூபெக்கின் மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் Côte-des-Neiges—Notre-Dame-de-Grâce (CDN-NDG) நகராட்சிப் பகுதியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரைகோவா நிறுவனம் நிறைவேற்றத் தவறியதே இந்த வழக்கின் பின்னணி ஆகும்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, கழிவுகளைச் சேகரிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்காக நகரசபை மறுசுழற்சி நிறுவனமான ரைகோவா மீது விதித்த அபராதங்களை மையமாகக் கொண்டுள்ளது.
மொன்றியால் நகரசபை டெண்டர் கோரியபோது, செய்ய வேண்டிய வேலைகள் குறித்த தவறான தகவல்களை வெளியிட்ட பிறகு ரைகோவா ஒப்பந்தத்தைப் பெற்றது.
இந்தத் தகவல் விரைவிலேயே சரிசெய்யப்பட்டாலும், ஒப்பந்தத்தை ரைகோவா நிறைவேற்ற முடியாமைக்கு, ஆரம்ப கட்டத்தில் அளிக்கப்பட்ட தவறான தகவல்களும் பங்களித்தன.
2019 ஆம் ஆண்டில், ரைகோவா தனது கடமைகளை நிறைவேற்ற முடியாததால் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்ட பிறகு, நகரசபையால் “சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட” அபராதத் தொகை $1,014,903 ஐத் திரும்பப் பெறக்கோரி வழக்குத் தொடர்ந்தது.
கியூபெக் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர் 2024 ஆம் ஆண்டில், மொன்றியல் நகரசபையானது, ரைகோவா நிறுவனத்துக்குப் பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தார்.
ஏனெனில், ஒரு புதிய ஒப்பந்தம் மூன்றாம் தரப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டவுடன் ரைகோவா நிறுவனம், தனது கடமைகளிலிருந்து விடுவிக்கப்படும் என்று மொன்றியல் நகரசபை, அந்த நிறுவனத்தை நம்ப வைத்தது என்பதே, அந்தக் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் காரணமாக இருந்தது.
இந்த நிலையில், தற்போது வெளியான கியூபெக்கின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, மொன்றியல் நகரசபை ரைகோவாவுக்கு 1 மில்லியன் டொலர் செலுத்தத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
