டொரோண்டோ நகரில் உள்ள வடக்கு யார்க் (North York) பகுதியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் தங்குமிடத்தில் நேற்று பிற்பகல் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் தாக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொரோண்டோ காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்த கத்திக்குத்துச் சம்பவம், வில்சன் அவென்யூ (Wilson Avenue) மற்றும் பெவர்லி ஹில்ஸ் ட்ரைவ் (Beverly Hills Drive) சந்திப்புப் பகுதியில் அமைந்துள்ள ஆதரவற்றோர் தங்குமிடத்தில் நடைபெற்றுள்ளது.
நேற்று நண்பகலுக்குப் பிறகு காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இருவரும் 50 வயது மதிக்கத்தக்கவர்கள் என்று டொரோண்டோ காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரி, ரொட் ஜோக்கோ (Acting Insp. Todd Jocko) தெரிவித்துள்ளார்.
டொரோண்டோ அவசர மருத்துவப் பிரிவினர் (paramedics) காயமடைந்த இருவரையும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மற்றைய நபருக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
