கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் மஸ்கோடோபோயிட் துறைமுகம் (Musquodoboit Harbour) அருகே ஒஸ்ட்ரியா ஏரி சாலை (Ostrea Lake Road) பகுதியில் தொடங்கிய இந்தக் காட்டுத்தீ, அப்பகுதியில் வசித்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை வெளியேறச் செய்திருந்தது.
தற்போது, தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையால் நிலைமை சீரடைந்துள்ளதாகவும், சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஹாலிஃபாக்ஸ் தீயணைப்பு மற்றும் அவசர சேவை (Halifax Fire and Emergency), காவல்துறை (RCMP) மற்றும் இயற்கை வளங்கள் திணைக்களம் (Department of Natural Resources) ஆகியன இணைந்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தன.
ஹாலிஃபாக்ஸ் தொழில்முறை தீயணைப்பு வீரர்கள் சங்கம் (Halifax Professional Fire Fighters association) ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் வெளியிட்ட அறிவிப்பில், “நிலைமை சீரடைந்துவிட்டது” என்றும், “பணியாளர்கள் படிப்படியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர்” என்றும் தெரிவித்துள்ளது.
