கனடாவிலிருந்து அல்பெர்ட்டா மாகாணம் பிரிந்து தனிநாடாக உருவாக முயற்சிப்பது, குறுகிய காலத்தில் மிகப்பெரிய நிதிச் சுமைகளையும் பொருளாதாரப் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்று, எச்சரிக்கப்பட்டுள்ளது.
கல்கரி பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கைப் பள்ளி (University of Calgary School of Public Policy) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அல்பெர்ட்டா மாகாணம் பிரிந்து தனிநாடாக உருவாக முயற்சிப்பது நீண்டகாலத்தில் தீவிரமான நிச்சயமற்ற சூழலையே உருவாக்கும் என்று, அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பிரிந்து செல்லும் செயல்பாட்டின் போது, புதிய தேசிய நிறுவனங்களை அமைத்தல், சுங்கம் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளை உருவாக்குதல், சர்வதேச ஒப்பந்தங்களை மீண்டும் பேச்சுவார்த்தை மூலம் ஏற்படுத்துதல் போன்றவற்றுக்கு பில்லியன் டொலர் கணக்கில் நிதி தேவைப்படும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், தனிநாடாக மாறுவது உடனடியாக பொருளாதார சுதந்திரத்தைத் தராது என்றும், கனடாவின் ஏனைய பகுதிகள் மற்றும் சர்வதேச நாடுகளுடனான வர்த்தக உறவுகளில் கடுமையான தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, நிலத்தால் சூழப்பட்ட மாகாணமாக அல்பெர்ட்டா இருப்பதால், அதன் முதன்மை ஏற்றுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயுவை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதில் அண்டை நாடுகளின் தயவை எதிர்பார்க்க வேண்டிய நிலை தொடரும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்பெர்ட்டா மாகாணம் மத்திய அரசிடம் வழங்கும் வரிப் பங்களிப்பிற்கும், அதற்குப் பதிலாக மத்திய அரசு திரும்ப அல்பெர்ட்டாவுக்கு வழங்கும் நிதிக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக, அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் நீண்டகாலமாக அதிருப்தி நிலவி வருகிறது.
கூட்டாட்சி அமைப்பின் மூலம் அல்பெர்ட்டாவின் வளம் கிழக்கு மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் பின்னணியிலேயே, பிரிந்து செல்லும் சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இருப்பினும், உணர்ச்சிப்பூர்வமான தீர்வுகளை விட நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொள்வது அவசியம் என்பதை சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கையானது, கனடா கூட்டமைப்பிற்குள் இருந்தவாறே அதிக சுயாட்சியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே, அல்பெர்ட்டா மாகாணத்திற்குப் பயனளிக்கும் என்ற மறைமுகப் பரிந்துரையையும் முன்வைத்துள்ளது.


