மொன்றியல் நகரிலுள்ள சுட்-ஓவஸ்ட் (Sud-Ouest) பகுதியில், இளம் பெண் ஒருவரையும் அவரது 73 வயதுப் பாட்டியையும் கொடூரமாகப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில், 26 வயதான மஹத் ஃபர்ரா (Mahad Farrah) என்பவருக்கு எதிரான இரட்டைக் கொலை வழக்கு விசாரணை கியூபெக் உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
22 வயதான ஜேட் ரசெட் பியூலியூ (Jade Beaulieu Racette) மற்றும் அவரது பாட்டியான 73 வயது ஹியூகெட் மரண்டா ரசெட் (Huguette Maranda Racette) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில், மஹத் ஃபர்ரா மீது இரண்டு முதன்மை நிலைக் கொலைக் குற்றச்சாட்டுகள் (First-degree murder) சுமத்தப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றில் வாதாடுகையில், இக்கொலைச் சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்றல்ல என்றும், திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட பதுங்குத் தாக்குதல் (Ambush) என்றும் சுட்டிக்காட்டினர்.
சம்பவத்தன்று குறுஞ்செய்திகள் (Text messages) மூலமாக ஜேட்டைத் தொடர்பு கொண்ட குற்றவாளி, அவரை வீட்டை விட்டு வெளியே வருமாறு பொறிவைத்து அழைத்துள்ளதாகப் அரசுத் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
ஜேட் வீட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் மீதும், அவரைக் காப்பாற்ற முற்பட்ட அவரது பாட்டி ஹியூகெட் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நீதிபதி மற்றும் ஜூரிகள் முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த விசாரணையின் போது, சந்தேகநபர் மஹத் ஃபர்ரா மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த நபர் ஆகியோருக்கு இடையிலான குறுஞ்செய்திப் பரிமாற்றங்கள், தொலைபேசி அழைப்புப் பதிவுகள் மற்றும் சம்பவ இடத்தின் கண்காணிப்புக் கெமரா (CCTV) பதிவுகள் உள்ளிட்ட முக்கிய சாட்சியங்களை பொலிஸார் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

