அமெரிக்கா மற்றும் கனடா இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர் மற்றும் இறக்குமதி வரிப் பிரச்சினைகள் காரணமாக, கியூபெக்
மாகாணத்தைச் சேர்ந்த பல முன்னணி உற்பத்தி நிறுவனங்கள் தங்களது இயங்குதளங்கள் மற்றும் உற்பத்தி நிலையங்களை அமெரிக்காவிற்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கனடியப் பொருட்கள் மீது விதித்துள்ள 50 சதவீத கூடுதல் வரி விதிப்புகள் மற்றும் அதற்குப்
பதிலடியாகக் கனடா விதித்துள்ள எதிர் வரிகள் காரணமாக ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற பொருளாதாரச் சூழலே இந்நிலைக்கு முதன்மைக் காரணம் எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வர்த்தகப் போரின் தாக்கத்தால் அமெரிக்க சந்தையை மட்டுமே அதிகம் நம்பியிருக்கும் கியூபெக் நிறுவனங்களின் ஏற்றுமதி கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், அதிகப்படியான வரிச் சுமைகளைத் தவிர்க்கவும் வேறு வழியின்றி அமெரிக்க எல்லைப் பகுதிகளில் புதிய உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பது அல்லது இருக்கும் தொழிற்சாலைகளை அமெரிக்காவிற்கு முழுமையாக மாற்றுவது குறித்துப் பல நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.
குறிப்பாக, கியூபெக்கின் துணிநெசவுத் துறை, இயந்திரப் பாகங்கள் தயாரிப்பு, மரக்கூழ் மற்றும் தாள் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிறிய
அளவிலான உற்பத்தி ஆலைகள் அமெரிக்கக் சந்தையில் தங்களது வர்த்தக இழப்பைக் குறைப்பதற்காக அமெரிக்காவிலேயே நேரடியாக உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
மேலும், அமெரிக்காவின் இந்த வரி விதியினால் கியூபெக்கிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 7 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகப் பல கியூபெக் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைக் குறைத்துள்ளதுடன், தொழிலாளர்களைத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் தங்களது அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் 50 சதவீதக் கூடுதல் விலையை வசூலிக்க முடியாத
சூழலில், அதிக நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக, அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது கியூபெக் மாகாணத்தின் உற்பத்தித் துறைக்கும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
நிலைமை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அவசர நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவும் விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்தவும் கியூபெக் மாகாண அரசு, சிறப்பு நிதி உதவி மற்றும்
உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதற்கான புதிய கொள்முதல் விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், அரசு அறிவித்துள்ள நிதியுதவிகள் பெரு நிறுவனங்களுக்கே அதிகம் பயனளிப்பதாகவும், சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வர்த்தகப் போர் மேலும் நீடித்தால், கியூபெக்கிலிருந்து அமெரிக்காவிற்குத் தொழிற்சாலைகள் இடம்பெயர்வது அதிகரிப்பதுடன்
கியூபெக் மாகாணத்தில் பெருமளவிலான வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்
தக்கது.


