கியூபெக் மாகாணத்தில் நிலவும் கடுமையான வீட்டுவசதிப் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளில் ஏற்படும் இட நெருக்கடிக்கு, கட்டுப்பாடற்ற குடியேற்றமே முதன்மைக் காரணம் என பார்ட்டி கியூபெக்குவா (PQ) கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு, கல்வி மற்றும் வீட்டுவசதித் துறை நிபுணர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
தற்காலிக மற்றும் நிரந்தரக் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்புத் தேவையில் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், பல தசாப்தங்களாக நிலவும் கட்டமைப்பு ரீதியான தவறான நிர்வாகமே தற்போதைய நெருக்கடிகளுக்கு உண்மையான காரணம் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கியூபெக் நகரின் புறநகர்ப் பகுதியான லொரெட்வில்லில் (Loretteville) உள்ள பாடசாலையொன்றில் 24 தற்காலிக வகுப்பறைகள் சேர்க்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய 'பார்ட்டி கியூபெக்குவா (PQ) கட்சியின் தலைவர் பிளமொண்டன், குடியேற்றவாசிகளின் வருகையே பாடசாலைகளில் இடநெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
அத்துடன், ஆளும் கொவாலிசியன் அவனீர் கியூபெக் (CAQ) அரசாங்கத்தின் தவறான குடியேற்றக் கொள்கைகளே இதற்குப் பொறுப்பு
என்றும் அவர் விமர்சித்தார். கியூபெக் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புப் பராமரிப்புப் பிரச்சினைகளே உண்மையான சவால்கள் என ஆசிரியர் சங்கங்களும் கல்வி நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
வீட்டுவசதிப் பற்றாக்குறை குறித்தும் கருத்து தெரிவித்த பார்ட்டி கியூபெக்குவா கட்சித் தலைவர், குடியேற்றவாசிகளின் வருகையால் வீடுகளுக்கான தேவையும் வாடகையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த பல வருடங்களாக கியூபெக் மாகாணத்தில் புதிய வீடுகள் மற்றும் கட்டுப்படியாகும் விலையிலான வீடுகளின் (Affordable Housing)
கட்டுமானம் பெருமளவில் குறைந்துள்ளது.ஏர்பிஎன்பி (Airbnb) போன்ற குறுகிய கால வாடகைச் சேவைகளால் ஆயிரக்கணக்கான வீடுகள் பொது வாடகைச் சந்தையிலிருந்து வெளியேறியுள்ளன.
வட்டி விகிதங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் புதிய திட்டங்களைத் தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
குடியேற்றவாசிகளின் வருகை தேவையை அதிகரித்துள்ளதை ஒப்புக்கொள்ளும் நிபுணர்கள், அதேவேளையில் கட்டுமானத் துறையில்
நிலவும் தீவிரத் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் குடியேற்றவாசிகளின் பங்களிப்பு அவசியமானது என்றும்
தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பார்ட்டி கியூபெக்குவா கட்சி குடியேற்றப் பிரச்சினையை முதன்மைப் பிரசாரப் பொருளாக மாற்றி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

