ஆல்பபெட்டின் கூகிள் நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பின்லாந்தில் AI உள்கட்டமைப்பில் குறைந்தது €13 பில்லியன் ($15.1 பில்லியன்) முதலீடு செய்யவுள்ளதாக புதன்கிழமை அறிவித்துள்ளது. இது அணுமின்சார விநியோகத்திற்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் உட்பட, ஐரோப்பாவில் அந்நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாகும்.
நாட்டின் வட பகுதியில் மூன்று புதிய தரவு மையங்களை (data centres) உருவாக்குவது இந்த விரிவாக்கத்தில் அடங்கும். அதிகரிக்கும் AI கணக்கீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய முயலும் ஆல்பபெட், இந்த ஆண்டு தனது உலகளாவிய முதலீட்டை $195 பில்லியன் முதல் $205 பில்லியன் வரை உயர்த்தியுள்ளது.
இந்த முதலீட்டின் ஒரு பகுதியாக, பின்லாந்தின் இரண்டு அணுமின் நிலையங்களில் ஒன்றின் மின் உற்பத்தியில் 50% வரை வாங்குவதற்கான 22 ஆண்டுகால ஒப்பந்தத்தை மின் நிறுவனமான ஃபோர்ட்டமுடன் கூகிள் மேற்கொண்டுள்ளது. “அமெரிக்காவிற்கு வெளியே கூகிளின் முதல் அணுசக்தி ஒப்பந்தம் இதுவாகும்” என்று கூகிளின் தலைவரும் முதன்மை முதலீட்டு அதிகாரியுமான ரூத் போரட் ஹெல்சிங்கியில் தெரிவித்தார்.
நோர்டிக் நாடுகளின் குளிர்ந்த காலநிலையும் நிலையான மின் விநியோகக் கட்டமைப்பும் தரவு மையங்களுக்கு உகந்த இடமாக அமைகின்றன. மேலும், புதிய அணுசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாடு குறித்தும் ஃபோர்ட்டம் மற்றும் கூகிள் ஆராயவுள்ளன. இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஃபோர்ட்டமின் பங்குகள் 15.5% உயர்ந்து புதிய உச்சத்தை எட்டின.
2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்டுள்ள இந்த முதலீடுகள், ஜெமினி, சேர்ச், மேப்ஸ் மற்றும் யூடியூப் போன்ற சேவைகளை இயக்கும் தூய்மையான ஆற்றல் மற்றும் பேட்டரி திட்டங்களை உள்ளடக்கியது. இது கட்டுமானக் கட்டத்தில் பின்லாந்தின் GDP-இல் சுமார் €3.6 பில்லியன் பங்களிக்கும் என்றும், செயல்படத் தொடங்கியதும் ஆண்டுதோறும் சுமார் 7,000 வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை புதுமை மற்றும் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் என்று பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்ஃபோ தெரிவித்துள்ளார். இந்த நீண்டகாலக் கொள்முதல் ஒப்பந்தம் லோவிசா (Loviisa) மின் நிலையத்தின் ஆயுட்காலத்தை 2050 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க பொருளாதார நிச்சயத்தன்மையை வழங்குகிறது என ஃபோர்ட்டம் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

