ஜப்பானின் முன்னணி மதுபானத் தயாரிப்பு நிறுவனமான சப்போரோ (Sapporo Breweries) தனது தயாரிப்புகளின் ஒரு பகுதியை கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்றத் தீர்மானித்துள்ளது.
கனடிய உற்பத்திகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ள 50 சதவீதக் கூடுதல் இறக்குமதி வரிகள் காரணமாகவே அந்த நிறுவனம் இந்த முடிவினை மேற்கொண்டுள்ளது.
இதன் காரணமாகக் கியூபெக் மாகாணத்தின் சாம்பிலி (Chambly) பகுதியில் அமைந்துள்ள யுனிப்ரூ (Unibroue) உற்பத்தி தொழிற்சாலை மற்றும் கனேடியத் துணையமைப்பான ஸ்லீமன் பீரவரிஸ் (Sleeman Breweries) ஊழியர்களின் வேலைவாய்ப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சப்போரோ& நிறுவனத்தின் தலைமை உத்தி அதிகாரி (Chief Strategy Officer) ரீகோ ஷோஃபு (Rieko Shofu) அளித்துள்ள செவ்வியின்படி, கனடாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் மதுபானங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50% வரி ஆனது, தங்களது
கட்டுப்பாட்டை மீறிய ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் முதற்கட்டமாக, அமெரிக்கச் சந்தைக்காகக் கனடாவில் உற்பத்தி செய்யப்படும் மதுசாரம் அற்ற (Non-alcoholic beer) மதுபான உற்பத்தியை வரும் 2027-ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள், முழுமையாக அமெரிக்காவிற்கு மாற்ற அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் புதிய உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கு அல்லது அங்குள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கியூபெக்கின் பாரம்பரியமிக்க மதுபான ஆலைகளில் ஒன்றானயுனிப்ரூ (Unibroue) ஆலையைச் சப்போரோவின் கனேடியக் கிளையான ஸ்லீமன் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
அமெரிக்காவின் இந்த வரி அதிகரிப்பினால், கனடாவிலிருந்து ஏற்றுமதியாகும் மதுபானங்களின் விற்பனை கடுமையாகச் சரிவடையும்என்பதால், கியூபெக்கில் உள்ள உற்பத்தி அலகுகளில் வேலை குறைப்பு அல்லது உற்பத்தி நேரம் குறைக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், டொனால்ட் டிரம்பின் இந்த ஒருதலைப்பட்ச வர்த்தகக் கொள்கைகளால் கியூபெக்கின் உற்பத்தித் துறை மற்றும் உணவு பான உற்பத்தித் துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் ஆசிய வகை மதுபான விற்பனையில் முன்னணியில் திகழும் சப்போரோ நிறுவனம், 2030-ஆம் ஆண்டிற்குள் சுமார் 300 பில்லியன் முதல் 400 பில்லியன் யென் வரை, சர்வதேச அளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதில் பெருமளவிலான நிதி அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியைப் பலப்படுத்தவே பயன் படுத்தப்படவுள்ளது. நாட்டின் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் அமெரிக்காவின் பதிலடி
வரிகளிலிருந்து உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்க நிதி உதவிகளை அறிவித்து வரும் போதிலும், சர்வதேச நிறுவனங்கள் தங்களது உற்பத்தி மையங்களை அமெரிக்காவிற்கு மாற்றுவது, கியூபெக் பொருளாதாரத்திற்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

