உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், அதற்குப் பதிலடியாக ரஷிய எல்லைக்குட்பட்ட ராணுவ இலக்குகள் மீது உக்ரைன் தனது வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதனால் ரஷிய வான்வெளி வணிகரீதியான பயணிகள் விமானங்களுக்கு பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பயணிகள் விமானங்கள் ட்ரோன்கள் நிறைந்த வான்வெளியில் பறப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும், இதனால் ரஷியாவின் வான்வெளி விரைவில் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெலன்ஸ்கியின் இந்த எச்சரிக்கைக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், பயணிகள் விமானப் போக்குவரத்தை அச்சுறுத்தும் வகையில் பேசுவது “அரசு பயங்கரவாதம்” என்று சாடியுள்ளார்.
மேலும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களுடன் ரஷியா ஒருபோதும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தாது என்று திட்டவட்டமாகக் கூறிய புதின், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார இலக்குகள் மீது ரஷியப் படைகள் தீவிரமான பதிலடித் தாக்குதல்களைத் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்தே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் ரஷிய வான்வெளியைத் தவிர்த்து வரும் நிலையில், இந்தியா, சீனா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் பயணிகள் விமானங்கள் ஆசிய-ஐரோப்பிய வழித்தடங்களுக்காக ரஷிய வான்வெளியை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.
தற்போது உக்ரைனின் நீண்டதூர ட்ரோன்கள் ரஷிய பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தி வருவதால், வான் பாதுகாப்பு அமைப்புகளின் குறுக்கீடு காரணமாக பயணிகள் விமானங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக சர்வதேச விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



