மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்காலிகமாக தணிந்திருந்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வான்வழி மோதல்கள் மீண்டும் உக்கிரமடைந்துள்ளன.
ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடல்சார் கண்ணிவெடிகளை பதிப்பதாக குற்றம் சாட்டி, அந்நாட்டின் எண்ணெய் கப்பல்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ராணுவ கட்டமைப்புகள் மீது அமெரிக்கப் படைகள் தீவிர தாக்குதலை நடத்தின.
இந்தத் தாக்குதலின் போது தெற்கு ஈரானின் குஹெஸ்டாக் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் வீழ்ந்த ஏவுகணை சிதறல்கள் காரணமாகத் திருமண விழாவில் பங்கேற்ற ஒரு குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஜோர்டானின் அகபா பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படைத் தளம் (‘கேம்ப் டிடின்’) மற்றும் இளவரசர் ஹசன் விமானத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் சுமார் 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
ஈரானின் இந்தத் தாக்குதலில் 10 ஏவுகணைகளை ஜோர்டான் வான் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகவும், மீதமுள்ள 3 ஏவுகணைகள் மக்கள் நடமாட்டமில்லாத காட்டுப் பகுதியில் விழுந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவ உள்கட்டமைப்புகள் மற்றும் ட்ரோன் தளங்கள் சேதமடைந்ததாக ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) உரிமை கோரியுள்ளது.
இந்த மோதலைத் தொடர்ந்து பக்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களும் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.



