2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் மொழி மூலமான பரீட்சையில் அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளது.
இந்த 188 புள்ளிகள் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரால் பெறப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் விசேட தேவையுடைய 1,018 மாணவர்கள் தோற்றியுள்ளனர். அதேவேளை, இம்முறை பரீட்சையின் அதிகூடிய வெட்டுப்புள்ளி 139 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், நாடளாவிய ரீதியில் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இப்பரீட்சைக்காக மொத்தம் 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



