தமிழக முதலமைச்சரும் திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான விஜயின் திரைப் பயணத்தில் கடைசித் திரைப்படமாக அமைந்த ‘ஜன நாயகன்’, திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகியுள்ளது.
தணிக்கைச் வாரியத் தாமதங்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களைக் கடந்து கடந்த ஜூலை 23 அன்று திரைக்கு வந்த இத்திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21 முதல் ‘ஜீ5’ (ZEE5) ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
இந்தியாவில் சுமார் ரூ.227.14 கோடியும், உலகளவில் ரூ.320.34 கோடியும் வசூலித்து மாபெரும் வசூல் வேட்டையை நிகழ்த்தியது.
இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரியாமணி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் உருவான ‘தளபதி கச்சேரி’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றன.
அரசியல் வருகைக்கு முன்பாக விஜய் நடித்த கடைசித் திரைப்படம் என்பதால், ரசிகர்களிடையே இத்திரைப்படத்திற்குத் தொடக்கம் முதலே பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
தளபதி வெற்றி கொண்டானாக விஜய் வெளிப்படுத்திய வழக்கமான துடிப்பான நடனம், அதிரடிச் சண்டைக் காட்சிகள் மற்றும் அரசியல் கோணத்திலான மாஸ் நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
திரையரங்கக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, தற்போது ஆகஸ்ட் 21 முதல் ஜீ5 தளத்தில் படம் வெளியாகவுள்ளதால் ஓடிடி பிரியர்களும் விஜய் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

