மொன்றியல் நகரில் இயங்கிவந்த யூதர்களுக்குரிய ‘நோவாம்’ (Nöam) கோஷர் (Kosher) உணவகத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து குறித்த விசாரணைகளை, மொன்றியல் பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
மொன்றியலின் ‘கோட்-டெ-நெஜ்–நோத்ர-டாம்-டி-கிராஸ்’ (Côte-des-Neiges–Notre-Dame-de-Grâce) பெருநகரப் பகுதிக்குட்பட்டதும் டெகாரி புலேவார்ட் (Décarie Boulevard) வீதியில் அமைந்துள்ளதுமான உணவகத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தை வெறுப்புக் குற்றச்செயல் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீவிபத்தின் போது சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், ‘நோவாம்’ (Nöam) கோஷர் (Kosher) உணவகத்தின் உட்பகுதி மற்றும் கட்டிடம் மிகக் கடுமையாகச் சேதமடைந்தது.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மொன்றியல் பொலிஸ் திணைக்களத்தின் (SPVM) பேச்சாளர் ரஃபேல் பெர்ஜெரோன் (Raphael Bergeron), தீ விபத்துத் தொடங்கும் போது உணவக வளாகத்திற்கு அருகில் நபர் ஒருவர் இருந்ததாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபகாலமாகக் நாட்டில் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்தத் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை மொன்றியல் பொலிஸாரின் தீவைப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு (Arson Squad) துரிதப்படுத்தியுள்ளது.


