அமெரிக்கா விதித்துள்ள கடுமையான இறக்குமதி வரிகள் மற்றும் அதற்கு பதிலடியாக கனடா மேற்கொண்டுள்ள வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக, கியூபெக் மாகாணத்தில் சுமார் 30,000 தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் எச்சரித்துள்ளார்.
கியூபெக் மாகாணத்தில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், வர்த்தகப் போரின் தீவிரம் கருதி, தமது தேர்தல் பிரசாரத்தை தற்காலிகமாக ஒத்திவைத்த பிரெஷெட், அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி புதிய பொருளாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ள நிலையில், கனடாவும் பதிலடி வரிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதனால் கியூபெக்கின் ஏற்றுமதி வர்த்தகத்தில் சுமார் 8.8 சதவீதப் பொருட்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கியூபெக்கின் முக்கிய பொருளாதாரத் தூண்களான மரக்கட்டை தயாரிப்பு (Softwood Lumber), பால் பொருட்கள், அலுமினியம், எஃகு மற்றும் விண்வெளி உதிரிபாக உற்பத்தித் துறைகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் கியூபெக் மாகாணம் முழுவதும் 18,000 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நிலவும் வர்த்தக நெருக்கடியால் மேலும் 30,000 வேலைவாய்ப்புகள் இழக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
டிரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு கியூபெக் ஒருபோதும் தலைவணங்காது எனவும் வேலைவாய்ப்புகளையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க அரசுக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தப் போவதாகவும் செய்தியாளர் சந்திப்பில், கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.


