கியூபெக் மாகாணத்தில் முதன்மைச் சுகாதாரப் பராமரிப்புப் பதிவேட்டில் (GAP) புதிதாகப் பதிவு செய்யப்பட்ட அரை மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளில் பெரும்பாலானோருக்குத் தனிப்பட்ட குடும்ப வைத்தியர் (Dedicated family doctor) ஒதுக்கப்படவோ அல்லது வழங்கப்படவோ இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கியூபெக் மாகாண அரசாங்கம் தான் நிர்ணயித்த இலக்கை விட முன்னதாகவே நோயாளிகளைப் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ள போதிலும், நோயாளிகள் தனிப்பட்ட மருத்துவருக்குப் பதிலாகக் குழு அடிப்படையிலான மருத்துவக் கிளினிக்குகளுடனேயே (GMF) இணைக்கப்பட்டுள்ளனர்.
கியூபெக் சுகாதார அமைச்சு மற்றும் குடும்ப வைத்தியர்கள் சங்கம் (FMOQ) இணைந்து மேற்கொண்ட உடன்படிக்கையின் கீழ், கடந்த ஜூன் 30 ஆம் திகதிக்குள் 5 இலட்சம் புதிய நோயாளிகளுக்குப் பராமரிப்பு அணுகலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
புதிய முறையின்படி ஒரு நோயாளிக்கு ஒரே குடும்ப வைத்தியர் தொடர்ச்சியாகச் சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட
மருத்துவமனையிலுள்ள (GMF) வைத்தியர்கள், சிறப்புச் செவிலியர்கள் (Specialized nurse practitioners) மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழுவே சிகிச்சை அளிக்கும்.
கியுபெக் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு குறித்து விமர்சித்துள்ள லிபரல் கட்சியின் சுகாதார விவகாரங்களுக்கான விமர்சகர் ஆண்ட்ரே ஃபோர்ட்டின் (André Fortin), தாங்கள் ஒரு கிளினிக்கில் பதிவாகியுள்ளோம் என்று காகிதத்தில் அறிவது மட்டுமே நோயாளிகளுக்குப் போதுமானதல்ல எனவும் அவர்களுக்குத் தேவை ஏற்படும் போது விரைவாக ஒரு மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெற முடிகிறதா என்பதும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
கியூபெக் மாகாணத்தில் தற்போது சுமார் 2,000 குடும்ப வைத்தியர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாகக் குடும்ப வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் மார்க்-அண்ட்ரே அமியோட் (Dr. Marc-André Amyot) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

