இந்த ஆண்டு பிற்பகுதியில் நாடாளுமன்றத்தின் பல்வேறு தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள கூட்டாட்சி இடைத்தேர்தல்களில் தாம் போட்டியிடப் போவதில்லை என புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைவர் ஏவி லூயிஸ் (Avi Lewis) திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் புதிய ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற ஏவி லூயிஸ், தற்போதைக்கு நாடாளுமன்ற ஆசனம் எதற்கும் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே இருந்துகொண்டு, அண்மைக்காலத் தேர்தல்களில் வரலாறு காணாத பின்னடைவைச் சந்தித்துள்ள புதிய ஜனநாயகக் கட்சியை மீண்டும் அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவதிலும், அடுத்த பொதுத் தேர்தலுக்குக் கட்சியைத் தயார்படுத்துவதிலுமே அவர் முழு கவனம் செலுத்தவுள்ளதாகக் கட்சியின் தலைமைப் பீடம் அறிவித்துள்ளது.
தற்போதைய நாடாளுமன்றத்தில் புதிய ஜனநாயகக் கட்சியின் பலம் வரலாறு காணாத வகையில் வெறும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக (MPs) சுருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

