கியூபெக் மாகாண சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடையவுள்ள நிலையில், மாகாணத்தின் அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 6 அவசரச் சட்டமூலங்கள் (High-Stakes Bills) கடுமையான விவாதங்களுக்கும் இழுபறிகளுக்கும் உள்ளாகியுள்ளன.
ஆளும் ‘கோலிஷன் அவினீர் கியூபெக்’ (CAQ) கட்சியின் அரசு ஆனது, நடப்பு கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் இந்த சட்டமூலங்களை அவசரமாக நிறைவேற்ற முயன்றது. எனினும், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு மற்றும் கால அவகாசம் இல்லாத காரணத்தினால் இந்த உயர்நிலை சட்டமூலங்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
மாகாணத்திற்கெனத் தனித்துவமான அரசியலமைப்பை (Quebec Constitution) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பில் 1 எனும் சட்டமூலம், சட்ட நிபுணர்கள், சிவில் உரிமை அமைப்புகள் மற்றும் பழங்குடியினத் (First Nations) தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மாகாணத்தின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 125 இல் இருந்து 127 ஆக அதிகரிக்கும் சட்டமூலமான பில் 3 ஆனது, சுயாதீன எல்லை நிர்ணய ஆணையத்தின் வரைபட மாற்றத்தால் சில பிராந்தியங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதைத் தடுக்க இது கொண்டுவரப்பட்டது எனினும், ஆளும் கட்சி அரசியல் லாபத்திற்காக இந்த வரைபடத்தை மாற்றுவதாகப் பலத்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வன்முறைப் பின்னணி கொண்ட நபர்களின் குற்றவியல் வரலாற்றை, ஆபத்தில் இருக்கும் அவர்களது வாழ்க்கைத்துணையுடன் பொலிஸார் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கும் ‘பில் 4’ எனப்படும் இந்த கேபி சட்டமூலம் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தாலும், பழங்குடியினப் பெண்களின் பாதுகாப்பை இது முழுமையாக உறுதி செய்கிறதா என்பதை அறிய, கூடுதல் ஆலோசனைகள் தேவை எனப் பெண்கள் அமைப்புகள் கோரியுள்ளன.
கியூபெக் மாகாண சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதிக்கட்ட நாட்கள் நெருங்கிவிட்டதால், இந்தக் காலகட்டத்திற்குள் அனைத்துச் சட்டமூலங்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு நிறைவேற்றுவது, ஆளும் கட்சியின் அரசுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.


