லோங்காய் (Longueuil) நகர பொலிஸார் சட்டத்திற்குப் புறம்பாகவும் பொருத்தமற்ற முறையிலும் நடந்துகொண்டதாக எழுந்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து கியூபெக் மாகாண உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அதிகாரப்பூர்வ நிர்வாக விசாரணையை (Administrative Investigation) ஆரம்பித்துள்ளது.
மொன்றியலின் தென் கரைப் பிராந்தியத்தில் (South Shore) கடந்த ஆண்டு பொலிஸாரால் 15 வயது சிறுவன் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், லோங்காய் (Longueuil) நகர பொலிஸார் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துள்ளதாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ நிர்வாக விசாரணையை ஆரம்பிப்பதற்கு மாகாணத்தின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இயன் லஃப்ரெனியர் (Ian Lafrenière) உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கியூபெக்கின் புகழ்பெற்ற சிரேஷ்ட சட்டத்தரணி மிஷெல் புஷார்ட் (Michel Bouchard) தலைமையில் இந்த விசேட விசாரணை நடத்தப்படவுள்ளதுடன், அடுத்த ஆறு மாதங்களுக்குள் இதன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


