கியூபெக் மாகாணத்தில் அதிகரித்துள்ள பெட்ரோல் விலையிலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு, உடனடித் திட்டங்களை வகுக்குமாறு புதிய முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை அவர் கியூபெக் மாகாண நிதியமைச்சருக்குப் பிறப்பித்துள்ளார்.
பதவியேற்ற சில நாட்களிலேயே மக்களின் ‘வாழ்க்கைச் செலவு’ (Cost of Living) பிரச்சினையைக் கையிலெடுத்துள்ள அவர், தனது அரசாங்கத்தின் முதல் முக்கிய இலக்காக இதனை அறிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிப் பாதிப்புகளால், மொன்றியல் உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கியூபெக் முதல்வர் ஃப்ரெச்செட், நிதியமைச்சர் எரிக் ஜிரார்டிடம் (Eric Girard) இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி மாகாண சட்டமன்றம் கூடும் போது, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான நிதித் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என, புதிய முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் காலக்கெடு விதித்துள்ளார்.
